Tuesday 4 November 2014

5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு



இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4–ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கு அறிவிக்கையினை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடவுள்ளது.

பதவிகள்: இளநிலை உதவியாளர் பிணையம் (39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133); தட்டச்சர் (1683); சுருக்கெழுத்து தட்டச்சர் (331); வரித் தண்டலர் (22); வரைவாளர் (53) மற்றும் நில அளவர் (702). மொத்தத்தில் காலிப்பணியிடங்கள் 4 ஆயிரத்து 963.

நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள் 

கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள். கட்டணம் செலுத்த நவம்பர் 14–ந் தேதி கடைசி நாள். தேர்வு டிசம்பர் 12–ந் தேதி காலை நடைபெற உள்ளது.

தேர்வு மையங்களின் எண்ணிக்கை: 244 (மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள்)

விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளத்தில் இணையவழி விண்ணப்பம் மூலம் மட்டுமே.

விண்ணப்பிக்கும் முறை 

ஏற்கனவே நிரந்தர பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தர பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

நிரந்தர பதிவு செய்திருத்தல் மட்டுமே இப்பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.

கட்டணம் 

விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டு மூலம், விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

இதுகுறித்த சந்தேகங்களை 044–25332855, 044–25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002–ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment