Monday 24 November 2014

சிம்மம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

சிம்மம் 

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)


எதிலும் தனித்துநின்று போராடி வெற்றிபெறும் ஆற்றல்கொண்ட சிம்ம ராசிக்காரர்களே! இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, நேரத்திற்கு உணவு உண்ண இயலாத நிலை உண்டாகும். இந்த வருடம் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதே நல்லது. தயாள குணம்கொண்ட நீங்கள் பண விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டு என்றாலும் அதை சில தடைகளுக்குப் பின்பே பெறமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாக உங்களின் முன்கோபமே காரணமாக இருக்கும் என்பதால் முன்கோபத்தையும் முரட்டு சுபாவத்தையும் சற்று தளர்த்தி அனைவரிடமும் அன்பாக நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களின் மத்தியஸ்தத்திற்கு பலரிடம் நல்ல மதிப்பு உண்டென்றாலும் இந்த வருடம் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கமின்றி லாபத்தைப் பெறுவீர்கள். வேலையாட்களின் உதவி ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளை வகித்தாலும் மேலதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரத்தால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் இடையூறு, நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன உளைச்சல்கள் போன்றவை உண்டாகும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. நேரத்திற்கு உணவு உண்பதின்மூலம்  வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்திலுள்ளவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுமென்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்பட்டால் அனைத்து நற்பலன்களையும் அடையமுடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதிக அலைச்சல்களையும் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள். 

வேலை

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் இருக்கும் பதவிகளுக்கு பங்கம்வராமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. பிறர்செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் நீங்கள் பொறுப்பேற்கவேண்டியிருக்கும். கொடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாத காரணத்தால்  உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்கள் விருப்பத்தை சற்று தள்ளிவைப்பது உத்தமம்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி, பெறாமைகளை சமாளித்தே லாபத்தைப் பெறமுடியும். புதிய வாய்ப்புகள் வந்தாலும் அதை பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி குறையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. அரசு வழியில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் அதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் சுமாரான லாபத்தை அடையமுடியும். முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது. தொழிலாளர்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

பெண்கள்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் உண்டாகும் என்றாலும் நீங்கள் எதிலும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்று மையை நிலைநாட்டமுடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந் தாலும், செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். சில நேரங்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும் பூர்வீகச் சொத்துகளால் வீண் செலவுகளும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று கூடும்.

பணம்

இந்த ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டமச் சனி நடப்பதாலும், குரு பகவான் சாதகமின்றி சஞ்சரிப்பதாலும் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறமுடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியம். கொடுத்த கடன்களை சிறிது சிறிதாக வசூலித்துவிட முடியும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் தேவையற்ற வதந்திகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தாலும் நிதானத்தைக் கையாண்டால் நிச்சயம் வெற்றி உங்களுக்கே. மக்களின் ஆதரவும் சிறப்பாக அமையும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை, வரப்பு தகாரறு என சில பிரச்சினைகளை சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலன் உங்களுக்குக் கிடைத்துவிடும். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியினை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் வில்லங்கம் ஏற்படலாம்.

கலைஞர்கள்

கலைஞர்கள் தகுந்த வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். கடன்களும் குறையும்.

மாணவர்கள்

கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். ஞாபக மறதி, கல்வியில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியாத நிலை போன்றவை உண்டாகக் கூடும். பெற்றோர், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போதும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.  பயணங்களிலும் நிதானம் தேவை.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு சனி இந்த ஆண்டு 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச்  சனி நடைபெறுகிறது.  இதனால் சனிக் கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. வரும் 05-07-2015 வரை  குரு விரய ஸ்தானத்திலும் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, குருப்ரீதி தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி நெய் வழிபடுவது நல்லது. அந்தணர்களுக்கு தானங்கள் செய்வது உத்தமம். 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்வதால் துர்க்கை வழிபாடுவிநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment