Monday 24 November 2014

கடகம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)


நல்ல அறிவாற்றலும் கற்பனை சக்தியும் கொண்ட கடக ராசி ராசிக்காரர்களே!

ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் நிலை சற்றே மந்தமடைந்தாலும் உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளைப் பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வரும் 05-07-2015க்கு பிறகு குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும், குலதெய்வம் தெய்வதரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

ஆராக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சிறப்பாக அமையும். தேவையற்ற அலைச்சல்கள், நேரத்திற்கு சாப்பிடமுடியாத நிலை, வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும், நிம்மதியான உறக்கம்கூட வராது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போடவேண்டியிருப்பதால் மனநிம்மதி குறையும். ஜூலை 5-ஆம் பிறகு உடல் ஆரோக்கியரீதியாக உள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவச் செலவுகளும் குறையும்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, பொருளாதார நெருக்கடி சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும் என்றாலும், வரும் ஜூலை  5-ஆம் தேதி பிறகு தாராள தன வரவுகள் உண்டாகும். அசையா சொத்துகள் மூலமும் அனுகூலங்கள் கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது மிகவும் நல்லது.

வேலை

உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது, எதையும் எதிர்கொள்ள முடியும். குருப்பெயர்ச்சிக்குப் பின் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் ஊதிய உயர்வுகளும் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யவிருக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.

பெண்களுக்கான பலன்

ஆண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கு சிறுசிறு வயிறு பாதிப்புகள் வரலாம், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும் என்றாலும், குருமாற்றத்திற்குப் பின் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அனைத்துத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உறவினர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். 

பணம்

ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கலிலும், பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்த்துவிடுவது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் பணம் கொடுக்கல் வாங்கலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கிருந்து வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எதிர்நீச்சல் போடுவீர்கள். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதையும் சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்களை  மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

விவசாயத்தில் பட்ட பாட்டிற்கேற்ற பலனைப் பெற்றுவிட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும், தகுந்த நேரத்தில் முடிக்கவேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கால்நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடையவேண்டிய லாபங்களை அடைந்துவிட முடியும்.

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கத்தில் கலைஞர்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளைப் பிறர் தட்டிச்சென்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்துச் செல்வதும் அவசியம். சுகவாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது.

மாணவர்கள்

கல்வியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. வண்டி, வாகனங்களில் பயணம்செய்யும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது.

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015  வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு  வியாழக்கிழமைதோறும் நெய் தீபமேற்றுவது நன்மை பயக்கும், படிக்கும் பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடவும். தினமும் விநாயகரையும் வழிபாடு செய்யலாம் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment