Monday 24 November 2014

கும்பம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

கும்பம் 

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

வெள்ளை உள்ளமும், நெறிதவறாத பண்பும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே! இந்த 2015-ஆம் ஆண்டு தொழில், உத்தியோகரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகளைச் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் வம்பு வழக்குகளும் ஏற்படும். இந்த வருடம் நீங்கள் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி பிறகு குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மற்றவரை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சாதிக்கமுடியும். 


ஆரோக்கியம்

இந்த வருடம் முழுவதும் வீட்டில் உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பற்ற நிலை, எந்தவொரு பணியிலும் முழுமையாக கவனம் செலுத்தமுடியாத நிலை உண்டாகும்.  வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும். 

குடும்பம், பொருளாதாரம்

குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே எதிலும்  ஒற்றுமையுடன் செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். 

வேலை

இந்தாண்டு தொடக்கத்தில் செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்துமுடிக்க முடியாத நிலை, மேலிடத்தில் அவப்பெயர் எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமைய சற்று தாமத நிலை உண்டாகும். 05-07-2015 பிறகு ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும், கிடைக்கும் என்றாலும் இந்த ஆண்டு முழுவதும் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில்வியாபாரம்

இந்த வருடம் முழுவதும் தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகளும் வீண் விரயங்களும், தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களும் உண்டாகும். என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் வருவாய் சூடுபிடிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். அரசு வழியில்  எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் மறைவதால் மந்த நிலை விலகி லாபம் பெருகும். கூட்டாளிகளும் சாதகமாகவே செயல்படுவார்கள்.

பெண்களுள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  பணவிவகாரங்களில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் உத்தமம். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வது, குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் யோகம் உண்டாகும்.

பணம்

ஆண்டின் தொடக்கத்தில் பண விஷயத்தில் பிறருக்கு வாக்கு கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும்.

அரசியல்வாதிகள்

அரசியலில் உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். ஜூலை 5-ஆம் தேதி முதல் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்களில் நிறைய இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு சங்கடங்கள், வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும், உற்றார்- உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். காய், கனி, பூ வகைகளாலும் கால்நடைகளாலும் ஓரளவுக்கு லாபம் அமையும்,

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது.  நிறைய போட்டி பொறாமைகள் நிலவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. ஜூலை 5-ஆம் தேதி முதல் நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதோடு சுகவாழ்வு சொகுசு வாழ்வும் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். 

மாணவர்கள்

கல்வியில் சற்று மந்தநிலையே இருக்கும் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக ஈடுபாட்டுடன் செயல்படவேண்டியிருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும் வீணான பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப்பெற நல்ல முறையில் நடந்து கொள்வது நல்லது.

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு  எள் எண்ணெய் தீபமேற்றுவது சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். வரும் 05-07.2015 வரை குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. சர்ப கிரகங்களான கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது. வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment