Monday 24 November 2014

கன்னி ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

கன்னி   

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)


அனைவரிடமும் சகஜமாகப் பழகினாலும் அளந்துபேசும் தன்மையுடைய கன்னி ராசிக்காரர்களே! கடந்த காலங்களில் நடைபெற்ற ஏழரைச்சனி முழுமையாக முடிந்து விட்டது. இந்த 2015-ஆம் ஆண்டு அற்புதமாக அமைப்போகுகிறது. இதனால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், பொருளாதாரரீதியாக மேன்மையும் கொடுக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லா தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.  தொழில், வியாபாரரீதியாக மேன்மைமிகு பலன்கள் உண்டாகும். எடுக்கும்  புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலையும் அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் கௌரவங்களும் தேடி வரும். 05-07-2015 க்கு பிறகு தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு வீண் செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும் எதையும் சமாளித்து சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். பிரிந்துசென்ற உறவினர்கள் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கடன்களனைத்தும் குறையும்.

ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டிருப்பவர்களும் படிப்படியான ஆரோக்கிய முன்னேற்றத்தை அடைவீர்கள். இந்த வருடம் முழுவதும் உங்கள் மனநிலையும், உடல் நிலையும் மிகச்சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரால் இருந்த பிரச்சினைகள் மருத்துவச் செலவுகள் யாவும் குறைந்து நிம்மதி நிலவும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லா தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள்கூட தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி பிறகு பணவிஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள் உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும். நல்ல நிர்வாகத் திறமையும் உங்களிடம் பளிச்சிடும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபத்தை அடையமுடியும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறைவதால் புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சொன்ன நேரத்திற்கு ஆர்டர்களையும் சப்ளை செய்வதால் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் பெறமுடியும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியமானது இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதார மேன்மை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு போன்றவையும் உண்டாகும். கணவருடன் ஒற்றுமை பலப்படும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி யுண்டாகும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள் சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகங்களும் உண்டாகும். பணிபுரியக்கூடிய பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

பணம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போருக்கு நல்ல வருமானம் கிட்டும். பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வரும் குருப்பெயர்ச்சிக்குப்பின் பண விஷயங்களில் கவனமுடனிருத்தல் நல்லது. 

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் அமோக ஆதரவும் உங்கள் பக்கமே இருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலும் மறைமுக எதிர்ப்புகளை வெல்லும் வலிமையும் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை, காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையைப் பெறமுடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தனசேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி சுபிட்சமும் யாவும் சிறப்படையும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமே. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த கதாபாத்திரங்களில் நடிக்கமுடியும். உங்களின் திறமைகளுக்கு நல்ல தீனி கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிக்குவிப்பீர்கள்.

மாணவர்கள்

மாணவ மாணவியர்களின் கல்வித் திறன் மேலோங்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளும் உங்களால் பெருமையடையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தேடிவரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச்செல்வீர்கள்.

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமற்று சஞ்சரிப்பதால்  சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. குரு பகவான் 05-07-2015 முதல் 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment