Monday 24 November 2014

துலாம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட் டாமல் தன்னுடைய கருத்துகளைக்கூட சிந்தித்து வெளிப்படுத்தும் துலா ராசிக்காரர்களே! உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இந்த வருடம் ஏழரைச் சனியில் பாதச்சனி (குடும்பச் சனி) தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையத்தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தை அடையமுடியும். 

குடும்பம்பொருளாதாரம்

இந்த வருடம் முழுவதும் கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உறவினர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சற்று பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும், குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று அதிகரித்தாலும் ஊதிய உயர்வும் கிட்டும். கடன் களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலமென்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும் என்றாலும் வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். ஊதிய உயர்வுகளும் தாராளமாக இருக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களையே அடையமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும் ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே போட்டிகளை சமாளித்து அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் ஓரளவுக்கு உங்களது பிரச்சினைகள் குறைந்து வெற்றிப் படியை எட்டிவிடுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.

பெண்கள்

இந்த ஆண்டும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் உறவுகளும் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம்போன்ற மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன் சுமைகளும் குறையும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. சிலருக்கு அசையாச் சொத்துகளை வாங்கிச்சேர்க்கும் யோகமும் உண்டு.

பணம்

ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு ஏழரைச் சனி தொடருவதாலும் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது என்றாலும் ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது  நல்லது. குருப்பெயர்ச்சிக்குப் பின் வெளியூர், வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும் மகசூல் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெறமுடியாமல் போகுமென்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக்கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்தமுடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்கள்

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும் குருப் பெயர்ச்சிக்குப்பின் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் பத்திரிகைகளில் வீண் வதந்திகள் ஏற்படும். 

மாணவர்கள்

மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கட்டாயம் படிப்பில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். கூடாதார் நட்பை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப்பின் கல்வியில் தானாகவே ஈடுபாடு ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி உங்களுக்கே கிட்டும்.


பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தொடர்ந்து ஆஞ்சநேயரை வழிபடுவது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது. 05-07-2015 வரை குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். சர்ப கிரகமான  ராகு  12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது. வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment